ஜெயலலிதா ஆசியுடன் எனது தலைமையிலான ஆட்சி தொடரும்- ஓபிஎஸ் - Instant Portal

எதிர்க் கட்சி, மாற்றுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எனது ஆட்சி தொடரும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசியுடன் எனது தலைமையில் ஆட்சி நீடிக்கிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் தனது தலைமையிலான ஆட்சி தொடரும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசியுடன் நல்லாட்சி தொடர எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். கடந்த ஒருவார காலமாக அதிமுகவில் அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவார காலமாக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர். 8 எம்எல்ஏக்கள், 11 எம்.பிக்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. தீர்ப்புக்குப் பிறகு பிரிந்து போன எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது என்பது இன்று உறுதியாகியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து எம்எல்ஏக்களும் கசப்புகளை மறைந்து ஒன்றாக இணைய வேண்டும் என்றும், கடந்த ஒருவாரகாலமாக தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் அவர், எதிர்கட்சியினர், மாற்றுக்கட்சியினர் ஆதரவு இன்று ஆட்சியை தொடருவேன் என்றும், தனது தலைமையிலான ஆட்சி ஜெயலலிதாவின் ஆசியுடன் தொடரும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் ஆசி நமக்கு உள்ளதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிசெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Share this

Related Posts